states

img

ஆக்சிஜன் கேட்டு அழுதவரை  ‘அறைந்து விடுவேன்’  என மிரட்டிய பாஜக மத்திய அமைச்சர்....

போபால்:
தாயின் உயிரைக் காப்பாற்ற ஆக்சிஜன் கேட்டு கதறியவரை நோக்கி, ‘கன்னத்தில் இரண்டு அறை அறைந்துவிடுவேன்’ என்று  மத்திய பாஜக அமைச்சர் பிரஹலாத் படேல் மிரட்டல் விடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் பாஜக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் ஆட்சி நடக்கிறது.இங்குள்ள தாமோ லோக்சபா தொகுதியைச் சேர்ந்த, பாஜக - எம்.பி., பிரஹலாத் படேல்  மத்திய சுற்றுலா - கலாச்சாரத்துறை இணை அமைச்சராக உள்ளார்.
கொரோனா தொற்று பரவல் மிகவும் அதிகரித்துள்ள  10 மாநிலங்களில், மத்தியப் பிரதேசம் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பிரஹலாத் படேல், தாமோ மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வியாழனன்று வந்தார். அப்போது, அமைச்சரை அணுகிய சிலர், தங்கள் உறவினர்களுக்கு ஆக்சிஜன் சிலண்டர் அளித்து உதவும்படி கோரிக்கை விடுத்தனர்.கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர், தன் தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆக்சிஜன் வழங்க மருத்துவமனை நிர்வாகம் மறுப்பதாக தெரிவித்தார்.தயவு செய்து தன் தாயின் உயிரை காப்பாற்றும்படி அமைச்சர் முன், கண்ணீர்விட்டு கதறினார்.

இதனால் எரிச்சல் அடைந்த அமைச்சர் பிரஹலாத் படேல், ‘’இப்படியே பேசிக் கொண்டிருந்தால், கன்னத்தில் இரண்டு அறை விடுவேன்,’’ என மிரட்டினார்.  அமைச்சரின் இந்த பேச்சு, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

;